Tuesday, May 24, 2016

கேபிடலிஸம், சோஸியலிஸம், கம்யூனிஸம்



ஒரு மலை இருந்தது. அந்த மலைக்கு மேல் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு ஏரி இருந்தது. மக்கள் தினமும் அந்த ஏரிக்கு தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். ஒரு முறை சென்று வர 30 நிமிடம் ஆகும்.

ஊரில் இருந்த ஒருவன் யோசித்தான், சில வருடங்கள் கஷ்டப்பட்டு மலையைக் குடைந்து நீரை கிராமத்தின் பக்கம் திருப்ப ஒரு சுரங்கம் தோண்டினான். இப்பொழுது நீர் கிராமத்துக்கு அருகில் ஒரு வெட்டவெளியில் குளமாகியது. பிறகு பெருகி ஒடி புது நீரோடை உண்டானது.
சுரங்கம் வெட்டியவன் நீரை விற்க அனுமதி வாங்கினான்.

நீரின் விலையை எப்படி நிர்ணயிப்பது?


அதற்காக அவன் ஒரு கணக்கு போட்டான்.

ஒரு முறை தண்ணீர் எடுத்துவர 30 நிமிடம் ஆகும். ஒருமுறைக்கு இரு குடங்கள் தண்ணீர் எடுத்துவர முடியும். ஆக 15 நிமிடம் ஒரு குடத்திற்கு.

ஒரு மனிதனின் சராசரி வருமானம் 8 மணி நேர உழைப்பிற்கு 160 ரூபாய். அதாவது மணிக்கு 20 ரூபாய். 15 நிமிட நேரத்திற்கு 5 ரூபாய்.

ஆக நீரின் தற்போதைய விலை ஒரு குடம் 5 ரூபாய்.

எனவே தன்னுடைய குளத்திலிருந்து எடுக்கும் நீர் குடம் 3 மூன்று ரூபாய் என நிர்ணயித்தான்.
மக்களும் அவனின் விளம்பரத்தில் மயங்கி குடம் 3 ரூபாய்க்கு வாங்கத் தொடங்கினர்.

இதைக் கண்ட இன்னொருவனுக்கு தானும் ஒரு சுரங்கம் வெட்டவேண்டும் எனத் தோன்றியது.
அவன் இன்னும் கொஞ்சம் தாழ்வாக வரும்படிக்கு தன் சுரங்கத்தை வெட்டி நீரை கிராமத்தின் இன்னொரு பக்கம் சேமித்தான். அவன் குடம் நீர் இரண்டு ரூபாய்க்கு விற்கத் தொடங்கினான். அதனால் முதலாமவனும் விலையைக் குறைக்க வேண்டியதாயிற்று.

இதில் நல்ல இலாபம் இருப்பதைக் கொண்ட இன்னும் சிலர் தாங்களும் சுரங்கம் வெட்ட முனையவே... முதலில் தொழில் ஆரம்பித்த முதலாளிகள் அதற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

ஏரியின் நீரை கிராமத்திற்கு கொண்டுவர தாங்களே முதலில் முயன்றதால் ஏரி நீர் முழுக்க தங்களுக்கே சொந்தம் என்று அவர்கள் வாதாடினர். தங்களின் முயற்சியால் கிராமம் செழித்தது. கிராமம் முன்னேறியது. மக்களுக்கு எவ்வளவு இலாபம் கிட்டியது என கணக்கு காட்டினார். ஒரு குடம் தண்ணீருக்கு கிராமத்திற்கு மூன்று ரூபாய் மிச்சமானது. ஆகவே இத்தனை ஆண்டுகளில் கிராமத்திற்கு எவ்வளவு சேமிப்பை வழங்கி இருக்கிறோம் எனப் பட்டியலிட்டுக் காட்டினர்.

மனம் திருப்தியடைந்த நீதிபதியும் ஏரியின் நீர் முழுதும் அவர்களுக்கே உரியது என்றும், வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார்.
அது மட்டுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது.

இதுதாங்க முதலாளித்துவம்.

உண்மையை இப்பொழுது ஆராய்வோம்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானது இரண்டு விஷயங்கள் மட்டுமே. உழைப்பு மற்றும் அறிவு.

மத்தபடி அனைத்து இயற்கை வளங்களும் அனைவருக்கும் பொது.

சாதாரண மனிதன் தன் உழைப்பினால் தினம் தினம் சம்பாதிக்கிறான்.

அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். தன்னைச் சுற்றி இருப்போரின் பிரச்சனைகளைப் பார்க்கிறான்.

அந்த பிரச்சனைகளை குறைக்க என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறான். அங்கே தன் உழைப்பையும், தான் சேகரித்த செல்வத்தையும் முதலீடாக்குகிறான்.

தன்னுடைய அறிவினால் பிரச்சனைகளைக் குறைப்பதால் அவன் தான் கைவைத்த இயற்கை வளங்களை தனதாக்கிக் கொள்கிறான்.

அதாவது தனது அறிவு மற்றும் பண பலத்தினால் அனைவருக்கும் பொதுவான இயற்கை வளத்தைத் தனதாக்கிக் கொண்டு விற்க ஆரம்பிக்கிறான்.

அவன் உழைப்பை விற்கவில்லை. விற்றிருந்தால் அவன் அன்றாடங்காய்ச்சி ஆகியிருப்பான். அது பொதுவுடைமை தத்துவம்.

அவன் அறிவை விற்கவில்லை. விற்றிருந்தால் அது ஊர் பொதுகாரியமாக மாறி இருக்கும். ஊரே சேர்ந்து சுரங்கம் வெட்டி, மிகக் குறைந்த செலவில் தண்ணீர் அருந்தியிருப்பார்கள். பராமரிப்புசெலவிற்காகும் தொகை மட்டுமே மக்கள் செலுத்த வேண்டியதாக இருந்திருக்கும். அது சோஷியலிஸம்.

இரண்டையும் விட்டு ஊருக்கே பொதுவான இயற்கை வளம், ஊருக்கே பொதுவான நிலம் ஆகியவற்றை தனதாக்கிக் கொண்டு, பொதுச் சொத்தான இயற்கை வளத்தை விற்றதால் அவன் மிகப் பெரிய பணக்காரனாக ஆகிறான்.

இந்தப் பணம் அவன் இன்னுமொரு இடத்தில் இன்னுமொரு விஷயத்தில் முதலீடாகி இன்னும் பலமடங்கு இலாபம் தரும். இது முதலாளித்துவம்.

அதாவது முதலாளித்துவத்தில் பொதுச்சொத்துக்களை தனியார் கைப்பற்றுவதே மிக முக்கிய அடிப்படையாகிப் போகிறது. அதனால் முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடுகளில் பெரும் பணக்காரர்கள், அவர்களை அண்டிப்பிழைப்போர்கள் மற்றும் ஏழைகள் என மூன்று பிரிவினைகள் உண்டாகின்றனர்.

இவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மிக அதிகமாக இருக்கும்.

முதலாளித்துவத்தில் செல்வம் ஓரிடத்தில் குவிவதால் பல பெரிய காரியங்களை முதலீடு செய்து முடிக்க முடியும். ஆனால் இவர்களுக்கு ஆதாரம் தங்கள் உழைப்பை விற்கும் ஏழைகளும், அறிவை விற்கும் அண்டிப் பிழைப்பவர்களும்.

அறிவை விற்பவர்களை மயக்கத்தில் வைத்திருப்பதும், உழைப்பை விற்பவர்களை அறியாமையில் வைத்திருப்பதும் முதலாளிகளின் தந்திரங்கள்.

உழைப்பை விற்பவர்களும் அறிவை விற்பவர்களும் விழித்துக் கொண்டால் முதலாளித்துவம் ஒழிந்து போகும். அதை தடுக்கவே கன்ஸ்யூமரிஸம் எனப்படும் நுகர்வு மனப்பான்மை வளர்க்கப்படுகிறது. இது உலகத்தின் அனைத்து வளங்களும் அனைவருக்கும் பொது என்ற உண்மையை ஆழக்குழிதோண்டி புதைத்து விடுகிறது.

ஆக முதலாளித்துவத்தில் மட்டுமே பெரும் பணக்காரர்கள் உருவாகிறார்கள். அவர்கள் நாட்டின் இயற்கை வளங்களை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள், அவற்றை விற்றே மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள்.

அவர்களை அண்டிப்பிழைக்கும் அறிவாளிகள் தங்கள் பங்கிற்கு முதலாளிகளுக்கு மேலும் மேலும் பணம் சேர்க்க வாய்ப்புகளை உண்டாக்கி அதில் பெறும் சன்மானங்களால் சிறிது சிறிதாக தாங்களும் முதலாளிகளாக முயற்சிக்கிறார்கள். ஆனாலும் இவர்களால் பண முதலைகளுடன் மோதி இயற்கை வளங்களை கைப்பற்ற முடியாததால் பலர் வெறும் ஜால்ராக்களாகவே முடிந்து போகிறார்கள். இங்கேதான் பெருமுதலாளிகள் ஆகுபவர்கள் செல்வத்தை மட்டுமல்லாது அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்தி மேல் நோக்கி பயணிக்கிறார்கள்.

ஆனால் தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் முன்னேறவே முடிவதில்லை. அவர்கள் தங்கள் வம்சங்களை அறிவாளிகளாக்க முயற்சி செய்கிறார்கள்.
செல்வமும் அதிகாரமும் கைகோர்த்துக் கொண்டால் உழைப்பும் கல்வியும் அங்கே அடிமைகளாகி விடுகின்றன.

இன்று நமது நாட்டின் நிலையும் இதை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. சோஷியலிஸத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம்.

Friday, April 29, 2016

சுற்றுச் சூழலியலை காக்க 20 வழிகள் •

னிதன் வாழ்வதற்கு, அவன் வாழ்கிற சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியம். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டுச் செல்வதுதான்  நமக்குப் பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறு. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைக் காக்கும் விஷயத்தில் அரசாங்கம் உடனடியாகக் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன...?


தனது ஆலோசனைகளைச் சொல்கிறார்  சூழலியல் களச் செயற்பாட்டாளார் மற்றும் எழுத்தாளர் நக்கீரன்...


1. தமிழர்கள் நிலங்களின் பண்புகளுக்கு ஏற்ப அவற்றை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை... என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்தார்கள். இதுபோன்ற தொலைநோக்கு பார்வை வேறு எந்த இனத்திலும் கிடையாது. தமிழ்நாட்டின் நிலம் அனைத்தும் பாலையாக மாறிக்கொண்டுவருவதுதான் இப்போதைக்கு நாம் சந்திக்கும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னை. இதைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாகத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.


2. குறிஞ்சி நிலமான மலைப்பகுதிகளில் நம் முன்னோர்  எவ்விதமான வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த மாட்டார்கள். காரணம், பூமியின் ரத்தநாளங்களாக இருக்கும் நதிகளின் ஊற்றுக்கண்கள் எல்லாம் மலைகளில்தான் இருக்கின்றன. அங்கிருந்துதான் ஆயிரக்கணக்கான ஓடைகள் உற்பத்தியாகின்றன. எனவே மலையின் இயல்பைக் கெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால்கோடை வாசஸ்தலம் என்கிற பெயரில் மலையைக் குடியிருப்புப் பகுதியாகவும், வணிகக் தளங்களாகவும், தேயிலைத் தோட்டங்களாகவும் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்திருக்கிறோம். இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை தேவை.

3 குறுகிக்கொண்டே வரும் காடுகளின் பரப்பளவைப் பெருக்க வேண்டும். குறிப்பாக சோலைக்காடுகளின் பெருக்கம் மிகவும் முக்கியம். ஆங்கிலேயர்கள் காலம் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை யாருக்கும் சோலைக்காடுகள் என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆனால், இந்தக் காடுகள்தான், மலைகளில் பெய்யும் மழை நீரை ஆறு மாதங்கள் வரை தேக்கிவைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிடும். இந்தக் காடுகள் இருந்த இடங்கள் எல்லாம் இப்போது தேயிலைத் தோட்டங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

4.
தமிழகத்தில் மலைக்காடுகள் மட்டுமல்ல. கோயில் காடுகளும் இருந்திருக்கின்றன. இவற்றின் பரப்பளவு மூன்று சதுரக் கிலோமீட்டர் முதல் 200 சதுரக் கிலோமீட்டர் வரை. இதற்கான ஆதாரங்கள் இன்றைக்கும் அரசு ஆவணக் கோப்புகளில் இருக்கின்றன. மீண்டும் அதே பரப்பளவுக்கு கோயில் காடுகள் உருவாக்கப்பட வேண்டும். ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளைக் காட்டிலும்  அதிக அளவுக்கு வெப்பத்தைக் குறைப்பதிலும், கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுவதிலும் கோயில் காடுகள்தான் அதிகப் பங்காற்றுகின்றன.


5. ஆசியாவிலேயே மிகப் பெரிய சமவெளிப் பகுதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்தான். இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக விவசாயம் செய்யப்படுகிறது. உலகத்தில் வேறு எங்கும் தொடர்ந்து 5000 வருடங்களாக ஒரு நிலம் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு இல்லை. எனவே டெல்டா மாவட்டங்களை விவசாயப் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய தொழிற்சாலை அங்கே வர முடியாது. அப்படி அறிவிக்கப்படாததால்தான் மீத்தேன் திட்டம், நரிமணம் எரிவாயு  திட்டங்கள்... போன்றவை விவசாயத்துக்கும் விவசாயிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

6
நாட்டு மீனவர்கள் கடல் பல்லுயிர் பெருக்கம் பற்றிய அறிவுகொண்டவர்கள். எந்தக் காலத்தில் என்ன வகையான மீனைப் பிடித்தால் கடலில் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாது என்பது அவர்களுக்குத் தெரியும். வணிக நோக்கத்தில் மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்தும் விசைப்படகுகளும், இரட்டை மடி வலைகளும்தான் கடலின் பல்லுயிர் பெருக்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதனால் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாட்டு மீனவர்களை  கடல் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் சில பிரத்யேக உரிமைகளைப் பெறமுடியும்.

7.
அத்தனை அரசியல் கட்சிகளும், அரசுகளும் மணற்கொள்ளை, இயற்கை வளங்களைச் சூறையாடுதல் ஆகியவை குறித்த தங்களது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தங்களது தேர்தல் அறிக்கைகளிலும், அரசாங்கம் அமைத்த பிறகும் சுற்றுச்சூழல் இயற்கை வளங்களைக் கையாளுதல் சம்மந்தமாக தங்கள் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஆற்று மணல் எடுத்தல், கிரானைட் எடுத்தல் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் அளவு குறித்து, ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ 'வெள்ளை அறிக்கை' சமர்ப்பிக்க வேண்டும். அப்போது அவர்கள் குறைத்து சொன்னாலோ அல்லது கூடுதலாகச் சொன்னாலோ மக்கள் கேள்வி கேட்க வசதியாக இருக்கும்.

8.
உருகுவே, ஈக்வெடார் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக  எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவார்கள். கையெழுத்து இயக்கத்தை நடத்துவார்கள். 25 சதவிகிதத்துக்கு மேல் எதிர்ப்பு இருந்தால் உடனடியாக அந்தத் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளும். ஆனால், இந்தியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தாமல், பொதுமக்கள் கருத்துக்கேட்பு மட்டுமே நடத்துவார்கள். இயற்கை வளங்கள் சம்பந்தமான திட்டங்களைச் செயல்படுத்தும்போது, லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பின்பற்ற வேண்டும் .




9.
நம் நாட்டில் ஒரு வெளிநாட்டுத் தொழிற்சாலை அமைக்கும்போது, அதில் இவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும், இவ்வளவு வருவாய் பெருகும் என்றெல்லாம் அறிவிக்கிற அரசு, அந்தத் தொழிற்சாலையால் பயன்படுத்தப்படும் மறை நீர் (virtual water) எவ்வளவு என்பதையும் தெரிவிக்க வேண்டும். உதாரணமாக மூன்று நிமிடங்களில் ஒரு கார் தயாரிக்கிறோம் என்று பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், அந்தக் காரைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு எவ்வளவு தெரியுமா..? சுமார் 4 லட்சம் லிட்டர். மூன்று நிமிடங்கள் ஒரு கார் வீதம் தயாரிக்கப்படும் அத்தனை கார்களும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் வெளிநாடுகளுக்குத்தான் அனுப்பப்படுகின்றன. சென்னையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாட காரணம்  ஏன் என்பது இப்போது உங்களுக்கே புரியும்.

10.
மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தால்கூட தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு இயற்கை வளச் சுரண்டல் செய்யும் திட்டங்களை அறிவித்துவிடும். உதாரணம்... டெல்டா மாவட்டம் நரிமணத்தில் இருக்கும் ஓ.என்.ஜி.சி. இதனால் திருவாரூர் மாட்டத்தில் அநேகப் பிரச்னைகள் இப்போதும் இருக்கின்றன. ஆனால், இது மத்திய அரசு திட்டம் என்று மாநில அரசு நழுவிக்கொள்கிறது. ஆனால், இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசாங்க வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மக்கள் வாழும் இடங்களுக்கு தீங்களிக்கும் திட்டங்களை அப்புறப்படுத்த முடியும். இப்படித்தான் அஸ்ஸாமில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் போராட்டத்தின் மூலம் ஓ என் ஜி.சி திருப்பி அனுப்பட்டது. ஏன் இது மாநில அரசின் வரம்புக்குள் வரவேண்டும் என்றால்... ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவாவது மாநில அரசு இதுபோன்ற தீங்குவிளைவிக்கும் திட்டங்களைத் திருப்பி அனுப்பும்.

11.
புட்டிநீர் விற்பனையை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும். காரணம், தனியார் செய்யும் இந்த வேலையை ஏன் அரசால் செய்யமுடியாது. தவிரவும், இந்தப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னைத் துண்டித்துக்கொள்கிறது என்றுதானே அர்த்தம். எனவே தனியார் செய்யும் தண்ணீர் வியாபாரத்தை முற்றிலும் தடுக்க வேண்டும்.

12.
ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் குடித்தண்ணீருக்கு முதலிடம் கொடுத்துவிட்டுத்தான் அந்தப் பகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. உதாரணம் சிவகங்கை மாவட்டம் பரமாத்தூர். இங்கே ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், கோகோ கோலா கம்பெனிக்கு போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதி இருக்கிறது. ஏன் அந்த நீரை சிவகங்கை பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு அரசாங்கம் வழங்கக் கூடாது. ஆனால், திருச்சி காவிரியில் இருந்து, கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ராமநாதபுரம் சிவகங்கை பகுதிகளுக்கு தண்ணீர் போவது ஏமாற்று வேலைதானே?

13.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். கடல் நீரைக் குடிநீராக்க பயன்படுத்தப்படும் ஒரு நாள் மின்சாரத்தை வைத்து 10 கிராமங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்துவிடலாம். சென்னையின் குடிநீர் தேவை 13 டி.எம்.சி. ஆனால், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 2 டி.எம்.சி குடிநீர் மட்டும்தான் கிடைக்கிறது. மீதமுள்ள 11 டி.எம்.சி தண்ணீரை எப்போதும் போல மற்ற பகுதியில் இருந்துதான் பெறுகிறது சென்னை குடிநீர் வாரியம். சென்னைக்கு குடிதண்ணீர் வாங்கும் 29 ஏரிகளில் 10 ஏரிகளைக் காணவில்லை. அந்தப் பத்து ஏரிகளில் இன்றைக்கு நகரமாகிவிட்ட கொளத்தூர், விருகம்பாக்கம் போன்ற பகுதிகள் அடக்கம். மீதமுள்ள ஏரிகளைத் தூர் வாரி அவற்றின் கொள்ளவை உயர்த்தினாலே சென்னை மாநகர மக்களின் குடித்தண்ணீர் தேவை தன்னிறைவை நோக்கி நகர ஆரம்பித்துவிடும்.

14.
சிறுதானியத்தை ஊக்குவிக்கப்பதுபோல மருத்துவத் துறையில் சித்த மருத்துவத்தை அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் நமது பாரம்பர்ய மூலிகைகளை மீட்டெடுக்க முடியும். இதனால் சுற்றுச்சூழலும் மேம்படும். டெங்கு, சிக்குன்குன்யா, வைரல் ஃபீவர்... போன்றவற்றுக்கெல்லாம் என்னென்னவோ மருத்துவம் பார்த்துவிட்டு கடைசியில் நாம் வந்து நின்றது நிலவேம்பு கஷாயத்திடம்தான். மூலிகைகள் அதிகமாகப் பயிரிடப்படுவது மானாவாரி நிலங்களில்தான். மானவாரி நில விவசாயத்தில் ரசாயன உரங்களுக்கு வேலையே இல்லை. இதனால் மானாவாரி நிலத்தின் இயல்புத் தன்மை காக்கப்படும்.


 



15.
கடலோரத்தில் இருக்கும் அலையாத்திக் காடுகள், அக்கறையோடு பராமரிக்கப்பட வேண்டும். சுனாமியைத் தடுத்து அது தரும் ஆபத்தில் இருந்து மக்களைக் காத்தது மட்டும் இதன் முக்கியத்துவம் அல்ல. இன்றைக்கு தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மீன்கள்தான் உணவு. அவற்றின் மூலம் மட்டுமே மக்களுக்கு புரோட்டீன் சத்து கிடைக்கிறது. அப்படிப்பட்ட 80 சதவிகித மீன் உற்பத்திக்கு அலையாத்திக் காடுகளும், கழிமுகப்பகுதிகளுமே  ஆதாரமாக இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பிச்சாவரம் - முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு இடையே 14 அனல் மின் நிலயங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக அப்போதை திமுக அரசாங்கம் சொன்னது. பின்னர் வந்த அதிமுக அரசாங்கம், அதைக் கிடப்பில் போட்டுவிட்டது. அந்தத் திட்டத்தை உடனடியாக அரசு கைவிடவேண்டும். ஏனென்றால், இந்த அனல்மின் நிலையங்கள்அலையாத்திக் காடுகளுக்கு எமனாக வந்து முடியும். இதனால் மீன் வளம் பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகிவிடும். ராமநாதபுரத்தில் இருந்து புதுகோட்டை மாவட்டம் வரைக்கும் உள்ள கடல் பகுதியை சேற்றுக் கடல் என்பார்கள். இது இறால் உற்பத்திக்கு சாதகமான நிலப்பகுதி. காரணம் இவை எல்லாம் ஒரு காலத்தில் அலையாத்திக் காடுகள் இருந்த பகுதிகள்.

 16
சென்னை போன்ற மாநரங்களில் வாகனங்களால் உண்டாகும் காற்று மாசு என்பது அபாயகரமாக இருக்கிறது. செயின்ட் தாமஸ் போன்ற உயரமான இடங்களில் நின்றுஇரவு நேரங்களில் பார்த்தால் நகரத்தின் மேலே காற்றில் சிவப்புப் படலம் படர்ந்திருப்பதைக் காண முடியும்... இவை எல்லாம் வாகனங்கள்தொழிற்சாலைகள் வெளியேற்றிய கார்பன் மோனாக்ஸைடு. இவை ஓசோன் படலத்துக்குக் கீழே இன்னொரு படலமாகத் தேங்கியிருக்கும். அவ்வளவும் நச்சுக்கள். எனவே வெளிநாட்டுக் கார் கம்பெனிகள் இங்கு வந்து தொழில் தொடங்கும்போது தமிழகம் மற்றும் இந்திய தேவைக்கு ஏற்ப கார்களை உற்பத்தி செய்தால் போதும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். ஏனெனில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு கார் உற்பத்தி செய்யும் அளவுக்கு காரின் தேவை தமிழகத்துக்கோ, இந்தியாவுக்கோ இல்லை.

17.
சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய எதிரி பாலீத்தின் பைகள் என்றால், அதைவிட வீரியமான எதிரி சின்னச் சின்ன பாலித்தீன் சாஷேக்கள்தான். இவற்றின் உற்பத்தியைத் தடை செய்யவேண்டும். வீட்டுச் சாக்கடையில் இருந்து பாதளச் சாக்கடை வரை அனைத்திலும் அடைப்புகளை உண்டாக்குவதில் இவற்றின் பங்கு மிக அதிகம். ஒருவர் நாளொன்றுக்கு 15 பாலீத்தீன் பைகள் பயன்படுத்தினால்சாம்பு  கவர், பாக்குத் தூள் பாக்கெட், பருப்பு பொடி பாக்கெட், தண்ணீர் பாக்கெட் என பாலீத்தீன் சாஷேக்களை 50-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பயன்படுத்துகிறோம். இவை மக்காதத் தன்மை கொண்டவை. இவை மண்வளத்தை அதிகமாகப் பாதிக்கின்றன. பாலீத்தின் பைகளை பொறுக்கிக்கூட மறுசுழற்சிக்கு விடலாம் என்கிறார்கள். ஆனால், பாலீத்தின் சாஷேக்களைப் பொறுக்கி மறுசுழற்சிக்கு அனுப்பும் வாய்ப்பு மிக மிக கடினம்.

19. 1920
வாட்டர் ஆக்ட் ( Water act ). ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இந்தச் சட்டம் சொல்வெதல்லாம் ஊராட்சிக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் எதையும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கலக்கக்கூடாது என்பதுதான் . ஆனால், இது சட்டமாக மட்டுமே இருக்கிறது; நடை முறையில் இல்லை. சென்னையில் அப்படி கலந்துதான், கூவம், அடையாறு போன்ற ஆறுகளைச் சாக்கடையாக்கிவிட்டோம். இதனைத் தடுக்கவும் கழிவுகளைச் சரியான முறையில் மேலாண்மை செய்யவும்திட்டங்களும் சட்டங்களும் தேவை. மயிலாடுதுறை சத்தியாவனம் கால்வாயில்சரியாக சுத்திகரிக்கப்படாத ஊராட்சிக் கழிவுகள்  கலந்ததன் மூலம், அந்தக் கால்வாய் பாசனம் பெறும் 50-க்கும் மேறபட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊர் மக்கள், சத்தியாவனம் கால்வாயை சின்னக் கூவம் என்றே அழைக்கிறார்கள். இது ஒரு சின்ன உதாரணம்தான். இதுபோல தமிழ்நாட்டில் அநேக உதாரணங்களைச் சொல்ல முடியும்.

20.
ஈக்வெடார் நாட்டில் தாய்மண் உரிமைச் சட்டம் என்று நிலப் பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்கள். இயற்கை வளங்களுக்கு எதிரான எல்லாத் திட்டங்களையும் இந்தச் சட்டம் எதிர்க்கிறது. இயற்கை வளங்கள் சல்லிசாகச் சூறையாடப்படும் தமிழகத்தில்இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளத்துக்கு எதிரான ஒரு திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதிக்கொடுத்தாலும், இந்தச் சட்டத்தின் மூலம் அந்தத் திட்டத்தை நிறுத்திவைக்க முடியும்.
மனித உரிமையைவிட, நிலம், இயற்கை வளப் பாதுகாப்புக்கு இது மிக முக்கியத்துவம் தருகிறது. எந்தவொரு தனிமனிதனும் இத்திட்டத்தின் மூலம் நிலம் இயற்கை வளங்களைப் பாதுக்காக்க நீதிமன்றத்தில் வழக்குத்  தொடுக்க முடியும்.  இந்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த 13 லத்தீன் அமெரிக்க நாடுகள், இதை அமல்படுத்தும் முயற்சியில் இருக்கின்றன. இதன் மூலம் நிலத்துக்கு எதிரான கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வெறியைத் தடை செய்ய முடியும்.
 
- கதிர்பாரதி


Thursday, April 28, 2016

தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற ஐந்து சூழலியல் போராட்டங்களும், அரசியல் கட்சிகளும் #WhereIsMyGreenWorld?

லக அளவில் சூழலியல் சார்ந்த பிரச்னைகள் வெகுமக்கள் கவனத்திற்கு வந்தது, ரெய்ச்சல் கார்சன் எழுதிய மெளன வசந்தம் நூலுக்கு பின்புதான். அது நாள் வரை, இயற்கை  சார்ந்த விஷயங்கள் கவிஞர்களுக்கான பாடு பொருளாக மட்டுமே இருந்த நிலையில், ரெய்ச்சல் எழுதி, 1962 ம் ஆண்டு வெளியாகிய  ‘மெளன வசந்தம்என்ற புத்தகம், சூழலியல் சார்ந்து உலகம் எதிர்நோக்க இருக்கும் பிரச்னைகள் குறித்த அபாய எச்சரிக்கையை எழுப்பியது. அதன் பின்பு, உலகமெங்கும் சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் திரண்டு போராட துவங்கினர். சாமான்யனின் குரல் உலகெங்கும் உள்ள பெரு நிறுவனங்களை, அரசை அசைத்து பார்த்தது.
அது போல், தென்னிந்தியாவிலும் ஐந்து முக்கிய வெற்றி பெற்ற சூழலியல் போராட்டங்கள் இருக்கின்றன. இந்த ஐந்து போராட்டங்களும் எந்த பெரிய கட்சிகளாலும் முன்னெடுக்கப்படவில்லை. எளிய மக்களால் முன்னெடுக்கப்பட்டு, வெற்றி பெற்ற போராட்டங்கள் அவை.


மெளன பள்ளத்தாக்கு போராட்டம் (Silent Valley Struggle):
உலகமெங்கும் சூழலியல் போராட்டங்களை முன்னெடுத்ததில், முக்கிய பங்கு கலைஞர்களுக்கு இருக்கிறது. 'கோரைப் புல் ஏரியில் வாடிவிட்டது, பறவைகள் பண்ணிசைக்கவில்லை' என்று பதறினான் கவிஞன் கீட்ஸ்.  கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் , ஏறத்தாழ 175,000 மைல்கள் பயணம் செய்து, மக்களுக்கு இயற்கையுடன் இயைந்து வாழ்வது எப்படி என்று பாடம் எடுத்ததோடு, தொழில்மயமாதலின் கருப்பு பக்கத்தையும் எடுத்துரைத்துள்ளார். கலைஞர் ஜான் ருஸ்கின், லேக் மாவட்டத்தை மாசுபடுத்தும் ரயில் இருப்பு பாதை திட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்துள்ளார். எழுதுவதோடு மட்டும் நில்லாமல், அவர் வேளாண் பண்ணைகளையும், கலைக் கூடங்களையும் உண்டாக்கினார்,
அது போலதான், தென்னிந்தியாவின் முக்கிய சூழலியல் போராட்டம் உலகுக்கு தெரிய காரணமாக இருந்தது, ஒரு கவிஞரின் கவிதைதான். ஆம். குந்தா, பவானி, சிறுவாணி போன்ற ஆறுகளின் தாய்மடியாக இருக்கும் மெளன பள்ளதாக்கை, நாசம் செய்ய 1973 ம் ஆண்டு, ஒரு திட்டத்தை முன் மொழிகிறது  கேரள அரசாங்கம். அந்த அடர் வனத்தில், வழிந்தோடும் நீர் நிலைகளுக்கு மத்தியில் ஒரு பெரும் அணையை கட்டி மின்சாரம் தயாரிப்பதுதான் கேரள அரசாங்கத்தின் திட்டம். பல அரிய உயிரினங்களின் கூடாக இருக்கும் அந்த அடர் வனம், இதனால் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பை முதலில் பதிவு செய்கிறார் கிண்டி பாம்பு பண்ணையை உருவாக்கிய ரோமுலஸ் விட்டேகர். அதன் பின், கேரள அறிவுஜீவிகள் இந்த திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். கேரள சாஸ்தர சாகித்ய பரிஷத்என்னும் அறிவியல அமைப்பு, இவர்களுடன் கரம் கோர்க்கிறது. அப்போது சுகந்தகுமாரி என்னும் மலையாள கவிஞர்,  ‘மரத்தின்னு சுதிதிஎன்று துவங்கும் கவிதையை எழுதுகிறார். இந்த கவிதை, போராட்டகாரர்களின் தேசியக் கீதம் ஆனது. ஏறத்தாழ 12 ஆண்டுகள் நடைபெற்ற  நீண்ட போராட்டத்தின் இறுதியில் வெற்றி கிடைக்கிறது. ஆம்அந்த எளிய மக்களால் தென்னிந்தியாவில் மிஞ்சி இருக்கும் ஒரே சோலைக்காடான மெளன பள்ளத்தாக்கு, காப்பற்றப்பட்டது. 




பிளாச்சிமடை கோலா போராட்டம்:
'இங்கு கோலியாத்துகள் தாவீதுகளால் வீழ்த்தப்படுவார்கள்' என்பது உலக பொது நியதி. ஆம். வீழ்த்தவே முடியாது என்று நினைக்கப்பட்ட உலகம் முழுவதும் தன் சாம்ராஜ்யத்தை விரித்துள்ள குளிர்பான நிறுவனத்தை வீழ்த்தியது மயில்லம்மா என்னும் பாமர பழங்குடி பெண். 
2000- ம் ஆண்டுகேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடை கிராமத்தில், கோலா நிறுவனம் தன் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான அனுமதியை பெற்றது. 

அவர்களுக்கு கேரள அரசு 15 ஹெக்டேர் நிலத்தை  ஒதுக்குகிறது. இந்த திட்டத்தை சந்தேக கண்ணுடனே அந்த பழங்குடி மக்கள் அணுகுகிறார்கள். ஆனால், வழக்கம் போல் வளர்ச்சியின் பாதுகாவலர்கள், 'இந்த திட்டம் வந்தால் வேலை கிடைக்கும், வளர்ச்சி வரும்' என்றார்கள். ஆனால், வளர்ச்சி வரவில்லை, வறட்சிதான் வந்தது. மேலும், ஆலையிலிருத்நு வெளியேற்றப்பட்ட கழிவு நீர்நிலத்தடி நீரை மாசுப்படுத்தியது. குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் நோயுற்றனர். 



மயிலம்மா போராட்டத்தை முன்னெடுக்கிறார். முதலில் அவருக்கு எதிராக மக்களை திருப்ப, அனைத்து ராஜதந்திரங்களையும் கம்பெனி கையாள்கிறது. அரசு அடக்குமுறையை ஏவுகிறது. ஆனால், மயிலம்மா மனம் தளரவில்லை. மக்களை ஒருங்கிணைக்கிறார், தொடர்ந்து போராடுகிறார். அந்த எளிய பெண்ணை உலகமே திரும்பி பார்க்கிறது. உலக முழுவதிலிருந்தும் செயற்பாட்டாளர்கள் அந்த சிறிய கிராமத்திற்கு வருகிறார்கள். இறுதியில் அந்த போராட்டம் வெற்றி பெறுகிறது. 

இந்த போராட்டம் இன்னொரு விஷயத்தை உலகிற்கு உணர்த்தியது. அதாவது, சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிறுவனங்களுக்கான உரிமையை ரத்து செய்யும் அதிகாரம் பஞ்சாயத்திற்கே உண்டு என்பதை. கோலா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமைகள் அனைத்தையும் பெருமாட்டி பஞ்சாயத்து ரத்து செய்தது.


விஸ்கோஸ் போராட்டம்:
தென்னிந்தியாவில் ஆற்றை காக்க நடந்த முதல் போராட்டம் விஸ்கோஸ் ஆலைக்கு எதிரான போராட்டம்தான். அது மிக நீண்டதொரு போராட்டமும் கூட. வரலாறுஅறுபதுகளை தொழிற் புரட்சி உண்டான வருடங்கள் என பதிவு செய்கிறது. ஆனால், அப்போது தொழிற் புரட்சி மட்டும் ஏற்படவில்லை. அது ஒரு மிகப் பெரிய சூழலியல் கேடுகளையும் கொண்டுவந்தது. அப்போது அரசும், நிறுவனங்களை வளர்ச்சியின் குறியீடாக மட்டுமே பார்த்தன. அதன் கருப்பு பக்கங்களை பார்க்க தவறின. 
சென்ற நூற்றாண்டின் மத்தியில், தமிழகத்தில் பருத்தி நூலிழைக்களுக்கு மிகப் பெரிய தட்டுபாடு  ஏற்பட்டது. அப்போது கோவையில் அதிகமாக மில்களும் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலம். இந்த பருத்தி நூலிழை தட்டுப்பாட்டை போக்கமேட்டுப்பாளையம் அருகே, சிறுமுகை பவானி ஆற்றின் கரையில் ரேயான் செயற்கை பட்டு இழை உற்பத்திக்காக சவுத் இந்தியா விஸ்கோஸ்என்ற பெயரில்சுமார் 300 ஏக்கரில் மிகப் பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டது. சில தசாப்தங்களில் இந்த நிறுவனம் வட இந்தியாவை சேர்ந்த வேறு பெருநிறுவனத்தின் கைக்கு மாறியது. அவர்கள் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து வழிமுறைகளையும் கையாள்கிறார்கள். இயற்கைக்கு எதிரான தொழிற் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கழிவு நீர் ஒழுங்காக சுத்திகரிக்கப்படாமல் பவானி ஆற்றில் விடப்படுகிறது. ஆறு மாசடைய துவங்குகிறது. மீன்கள் கொத்து கொத்தாக மடிகின்றன.
90-களில் விவசாயிகள் போராட துவங்குகின்றனர். பின்பு அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கின்றனர். முதலில் கள்ள மெளனம் சாதித்த நிறுவனம், சில அழுத்தங்களுக்கு பிறகு கொஞ்சம் இறங்கி வருகிறது. 'கழிவு நீரை முழுவதுமாக சுத்திகரித்து விடுகிறோம்' என்றது. ஆனால், அப்படி செய்யவில்லை. ஏறத்தாழ பத்து ஆண்டு போராட்டத்தின் விளைவாக, 2000 ம் ஆண்டு அந்த ஆலை முழுவதுமாக மூடப்பட்டது.
கொல்லி மலை - கஞ்சமலை - கவுந்தி வேடியப்பன் மலை போராட்டம்:
சாமான்ய மக்கள் நினைத்தால், வெறும் கல்லால் ராணுவ டாங்கிகளை வீழ்த்த முடியும் என்பதற்கான சான்று கொல்லிமலை - கஞ்சமலை போராட்டங்கள்.  வேதாந்தா நிறுவனம் எந்த அனுமதியும் வாங்காமல், கொல்லிமலையில் பாக்ஸைட் எடுக்கிறது. ஒரு நாளைக்கு நானூறு லாரிகள் விகிதம் 1996 ஆண்டிலிருந்து 2008 வரை எடுத்து வருகிறது.  அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் ஒருவர். 2008 ம் ஆண்டு, அந்த பகுதி மக்கள் அந்த நிறுவனத்திற்கு எதிராக போராட துவங்குகின்றனர். இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்த்திற்கு வருகிறது. 2012 ம் ஆண்டு கொல்லிமலையில் பாக்ஸைட் எடுக்க தடைவிதிக்கப்படுகிறது.


அதுபோல், சேலம் மாவட்டம் கஞ்சமலையில், இரும்பு கனிமங்களை வெட்டி எடுக்க ஜிண்டால் நிறுவனம் முயற்சிக்கிறது. அதற்கான அனைத்து அனுமதிகளையும் பொய் தகவலகள் அளித்து வாங்குகிறது. கஞ்சமலை பல அரியவகை மூலிகைகள் இருக்கும் சிறிய மலை பகுதி. இது அழிக்கப்பட்டால் அந்த பகுதியின் சூழல் கெடும். சூழலியலாளர் பியூஸ் முன்முயற்சியில், கஞ்சமலை பாதுகாப்புக் குழு அந்த பகுதி மக்களை கொண்டே கட்டமைக்கப்படுகிறது.  ஒரு நீண்ட போராட்டத்தின் விளைவாக ஜிண்டால் இங்கிருந்து பின்வாங்கி திருவண்ணாமலை கவுந்தி- வேடியப்பன் மலைக்கு ஓடுகிறது. அங்கும் மக்கள் அதை எதிர்க்கின்றனர். அந்த மக்கள் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக இரும்பு கனிமங்களை வெட்டி எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 
மீத்தேன் போராட்டம்:

சமகாலத்தில் இளைஞர்களின் எழுச்சியை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உணர்த்திய போராட்டம் மீத்தேன் போராட்டம். திமுக அரசு டெல்டா பகுதியில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க, 'கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி' கம்பெனிக்கு அனுமதி வழங்குகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், இந்த பகுதியே பாலைவனமாகும் என்று பதறுகிறார்கள் விவசாயிகள். அந்த பகுதி அறிவாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், சிறு இயக்கங்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பும் இந்த திட்டத்திற்கு எதிராக போராடுகிறது. மக்களின் எழுச்சியை எதிர்கொள்ளமுடியாமல், அரசு இதற்கு அளித்த அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்கிறது.

அது போல், கூடங்குளம் போராட்டத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த போராட்டம் முழு தோல்வி என்று அரசும், கூடங்குளம் அணு உலை நிர்வாகமே கூட சொல்லாது. ஆம். அணு உலை தீமைகள் குறித்து உலகிற்கே பாடம் எடுத்துவிட்டார்கள் அந்த எளிய மீனவ மக்கள். மாற்று மின்சக்தி குறித்து தமிழகம் தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அந்த எளிய மக்களுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. 
இந்த போராட்டங்கள் இன்னொன்றையும் உணர்த்துகிறது. அரசியல் கட்சிகள் எந்தளவிற்கு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இருக்கிறது என்பதை. இந்த அனைத்து போராட்டங்களும், எந்த அரசியல் கட்சியாலும் முன்னெடுக்கப்படவில்லை. எளிய, சாமான்ய மக்களால் முன்னெடுக்கப்பட்டது.  உலக சமத்துவம் பேசும் இடதுசாரிகள்தான் பிளாச்சிமடையில் கோலாவிற்கு அனுமதி தந்தனர்.

அரசியல் கட்சிகள் வகுத்த பாதையில் மக்கள் செல்லவில்லை. மக்கள் செல்லும் பாதையில்தான் இந்த அனைத்து போராட்டங்களிலும் கட்சிகள் சென்றன.

ஆம், எளிய மக்கள் உண்மையின் பக்கம் நிற்கும்போது, அநியாயங்கள் நிச்சயம் வீழ்த்தப்படும் என்பதற்கு இந்த போராட்டங்கள்தான் சான்று.

- மு. நியாஸ் அகமது