Sunday, April 17, 2016

எது முட்டாள்தனம்?

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் அவருக்குப் பயன்படும் என்று .

இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் . பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர். பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர். விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர்.

அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா , உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார் . என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே,

லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் . பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்.

1 comment: