Sunday, April 10, 2016

வனதேவர்களை பலி கேட்கும் தாராளமயம்!

ரங்களைக் காப்பாற்ற வேண்டும்...

நதிகளைக் காப்பாற்ற வேண்டும்...

விலங்குகளைக் காப்பாற்ற வேண்டும்...

பாரம்பர்யத்தைக் காப்பாற்ற வேண்டும்...

இப்படியெல்லாம் முழக்கங்கள் மாறி மாறி ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இயற்கைச் சூழலைக் காப்பாற்றுவதற்காக இப்படி ஒலிக்கும் குரல்களின் சத்தம் சமீப ஆண்டுகளாக ஓங்கியும் ஒலிக்கிறது. அரசாங்கம்கூட, தற்போது இயற்கை வேஷம் கட்டி ஆட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இதற்கு நடுவே, ஆதிமனிதர்களின் வாரிசுகளான ஆதிவாசிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற குரல் மட்டும் மங்கியே ஒலிக்கிறது. ஆதிவாசிகளுக்காக குரல் கொடுப்பவர்களும் அரிதாகவே இருக்கிறார்கள்.

ஆதிவாசிகளும்... இயற்கையும் பிரித்தரிய முடியாதவை. சொல்லப் போனால், இயற்கையின் பொக்கிஷங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முடைய கைகளுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணமே... ஆதிவாசிகள்தான். காலகாலமாக, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து, இயற்கை வளங்கள் கொள்ளை போய்விடாமலும் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வருபவர்கள் ஆதிவாசிகள்தான். ஆனால், வனதேவர்கள் என போற்றப்பட வேண்டிய அந்த மனிதர்களுக்கு எதிராக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன... அரசுகளும், பல நிறுவனங்களும்.

இந்த விஷயங்களை எல்லாம் பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, நெஞ்சுக்கு நெருக்கமாகப் பேசி பதிய வைத்தபோது, ஆட்சி, அதிகாரம், வளர்ச்சி என்கிற பெயர்களில் நாம் எத்தனை எத்தனை துரோகங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நன்றாகவே உறைத்தது!   

மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில், ‘விடுதலை வீரர்ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முப்பத்தி ஆறாவது நினைவு நாள் கூட்டம், அண்மையில் சென்னையில் நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குஹா, ‘சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமைஎனும் தலைப்பில் உரையாற்றினார். அதிலிருந்து...

ஆதிவாசிகளின் கவலைக்கிடமான நிலைமை, விடுதலைக்கு ஓர் ஆண்டுக்கு முன்னரே துவங்கி விடுகிறது. 13-12-1946 அன்று, நேரு வழி நடத்திய இடைக்கால அரசு, அரசமைப்புச் சட்டக்குழுவின் முன்பாக, ‘குறிக்கோள் தீர்மானங்கள்விவாதத்துக்கு வந்தன. இன்றைக்கு அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நடைமுறைகள் எனக் கொண்டாடப்படும் யாவும் அதில் அடங்கியிருந்தன.

நேரு, அவற்றை அறிமுகம் செய்து பேசுகிற போது, ‘சமூக, பொருளாதார, அரசியல் நீதி உறுதி செய்யப்படும். வாழ்க்கை நிலை, வாய்ப்புகள் ஆகியவற்றில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைவரும் சட்டத்தின் முன்னர் சமமாக நடத்தப்படுவர். கருத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, ஒரு இடத்தில் கூடும் உரிமை, விரும்பும் செயலை செய்யும் உரிமை ஆகியவை சட்டம், பொது நீதிக்கு உட்பட்டு வழங்கப்படும். அதேசமயம் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் பாதுகாப்பு, விடுதலை இந்தியாவில் உறுதி செய்யப்படும்என்றார்.

அந்தச் சமயத்தில், பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங், ‘நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப் பெற்றது என்றால், அது நாங்கள்தான். அவமதிக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் 6 ஆயிரம் ஆண்டுகள் அடக்கு முறையில் வாழ்ந்து வருகிறோம். என் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல்தான். இருந்தாலும், நேருவின் வார்த்தையை நான் நம்புகிறேன்என்றார்.

ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் ஆதிவாசிகள் (பழங்குடிகள்) சுரண்டப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். தங்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். குஜராத் துவங்கி ஒடிசா வரை மத்திய இந்தியாவில் பழங்குடியினர் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்கள்தான் ஆதிவாசிகள். சமவெளியில் வசிக்கும் மக்களுடன் அவர்களுக்கு இணக்கமான உறவு இருந்தது. தேன், மருத்துவப் பச்சிலைகள் ஆகியவற்றைத் தந்துவிட்டு உப்பு உள்ளிட்ட பிற பொருட்களை அவர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் உறவு இருந்தது.

ஆங்கிலேயர் காலத்தில்தான் ஆதிவாசிகள் மீதான சுரண்டல் வேகமெடுத்தது. தொடர் வண்டிகள் ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள், ஆதிவாசிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் குலைத்தார்கள். அவர்கள் உருவாக்கிய சாலைகள், தொடர்வண்டிகளால், அதுவரை நுழைய முடியாமல் இருந்த ஆதிவாசிகளின் பசுமை நிறைந்த பகுதிக்குள் வியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் நுழைந்தார்கள். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அம்மக்கள் சுரண்டப்பட்டார்கள். பிறகுதான், இதற்கு எதிரான தீவிரமான எழுச்சிகள், ஆயுதப்போராட்டங்கள் எழுந்தன. இன்னமும்கூட ஆதிவாசிகள் மிக மோசமான சூழலில்தான் வாழ்கிறார்கள்.

ஆதிவாசிகள் வாழும் காடுகள் செம்மையானவை, அங்கே நெடிய நதிகள் விரிந்து ஓடுகின்றன, எண்ணற்ற தனிமங்கள் இந்தப் பகுதிகளில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. இவை மூன்றையும் சேர்த்து ஆதிவாசிகளின் முப்பெரும் சாபங்கள்என்று சொல்வேன். விடுதலைக்குப் பிறகு தொழில்மயமாக்கல், வளர்ச்சி ஆகியவை வேகமெடுத்து தொழிற்சாலைகள், அரசு சுரங்கங்கள், அரசு நீர்மின் திட்டங்கள் ஆகியவை இப்பகுதிகளைக் கூறுபோட்டன. சமவெளி மக்களின் நல்வாழ்வுக்கு இம்மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இடம் பெயர்ந்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசிகள் தங்களின் இருப்பிடங்களை விட்டு அரசின் கொள்கைகளால் துரத்தப்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.

ஆதிவாசிகள் பொருளாதார அமைப்பில் பெரும் கொடுமைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இருந்த போது, கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள் என்றால்... தாராளமயமாக்கல் காலத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பரவியிருக்கிறார்கள் என்றாலும், ஒடிசா மாநிலம்தான் தாராளமயமாக்கலால் விளைந்த பலனுக்கு நேரடி சாட்சி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வரை அங்கே மாவோயிஸ்ட்கள் தாக்கம் இல்லை. ஆனால், ஒடிசா அரசு, சுரங்க நிறுவனங்களோடு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. பாக்சைட் முதலிய பல்வேறு தனிமங்கள் வெட்டியெடுக்கப்பட, ஆதிவாசிகள் தங்களின் வாழ்விடங்களை விட்டுஅதிகாரத்தைக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.

மக்கள்தொகையில் குறிப்பிட்ட சில பகுதியில் ஆதிவாசிகள் அடங்கிவிடுவதால் தேர்தல் அரசியலில்கூட அவர்கள் கவனிக்கப்படுவதில்லை. அரசு அதிகாரிகள், காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் அனைவருமே ஆதிவாசிகளின் நியாயமான சிக்கல்கள் குறித்து அறியவில்லைஎன்ற ராஜேந்திர குஹா, ‘‘வருங்காலத்திலாவது ஆதிவாசிகளின் வாழ்வு செம்மையுறும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டுஎன்று நம்பிக்கையை விட்டுவிடாமல் பேசினார்.

நம்புவோம்... இயற்கையைப் போல, ஆதிவாசிகளும் மீள்வார்கள் என்று!

1 comment: