Thursday, April 7, 2016

அருவிகள்




வழக்கமாக மே மாதத்தின் கடைசி வாரத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும் என்பதால் அங்கு செல்ல சிலர் முடிவெடுத்து இருக்கக்கூடும். குற்றாலத்துக்கு செல்பவர்கள் அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் இதமான சாரல் மழையில் நனைந்தபடியே  குளித்து மகிழ்ந்து இருப்பீர்கள். இது தவிர, குற்றாலத்தைச் சுற்றிலும் மேலும் சில அருவிகளும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

குண்டாறு
குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கம் சீசன் சமயங்களில் நிறைந்து விடும், தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளிக்க அந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே வருகிறார்கள். குழந்தைகளுடன் சென்று குளிக்கக் கூடிய இடமாக இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு அருகே நிறைய தனியார் அருவிகள் உள்ளன. தனியார் அருவி என்பது, தனியாருக்குச் சொந்தமான வனப்பகுதிக்குள் பாய்ந்து வரக்கூடிய தண்ணீர் அருவியாக கொட்டும் இடங்களில் எந்த நெரிசலும் இல்லாமல் குளிக்கலாம். அதற்கு அந்த தனியாரிடம் அனுமதி பெற வேண்டும். சில அருவிகளில் குளிப்பதற்கு கட்டணம் கூட வசூலிக்கிறார்கள். ஆனால், மக்கள் நெரிசல் இல்லாமல் அருவியின் இன்பத்தை அனுபவிக்க முடியும் என்பது அதன் சிறப்பு.

நெய்யருவி
குண்டாறு அணைக்கட்டுக்கு மேலே 2 கி.மீ தூரத்தில் இந்த அருவி இருக்கிறது. கரடு முரடான பாதையில் கார்கள் செல்ல முடியாது. இங்கு செல்வதற்காக உள்ளூர்காரர்கள் ஜீப் சர்வீஸ் நடத்துகிறார்கள். நபருக்கு 100 ரூபாய் கட்டணத்தை மேலே செல்லவும் திரும்பி வரவும் சேர்த்து வசூலிக்கிறார்கள். அறிமுகம் இல்லாத வெளியூர்க்காரர்களிடம் 500 ரூபாய் வரை கூட வசூகிக்கிறார்கள். இந்த ஜீப் டிரைவர்களே நெய்யருவியில் குளிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள்.

சின்னக் குற்றாலம்
தென்காசியில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவிக்கு புளியறை வழியாகச் செல்ல வேண்டும். தெற்குமேடு என்கிற பகுதிக்கு அருகில் இருக்கும் இந்த அருவியை சுற்றுலா மையமாக மாற்ற கடந்த ஆட்சியின்போது நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் பாதை கரடு முரடாக இருக்கிறது. இந்த அருவியில் குளித்தால் குற்ராலத்தின் சுகத்தை அனுபவிக்க முடியும். அத்துடன், சக சுற்றுலா பயணிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட்டு குடும்பத்துடன் ஜாலியாக குளிக்க விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த அருவிக்கு செல்லலாம்.

எருமைசாடி அருவி
தென்காசியில் இருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் அணைக்கட்டுக்கு அருகில் இருக்கிறது. இந்த அருவியானது தனியாரின் கட்டுப்பாட்டில் இருகிறது. ஆனால், காரில் சுலபமாக இந்த அருவிப்பகுதிக்கு சென்றுவிட முடியும். அத்துடன், கார் பார்க்கிங் வசதியும் சிறப்பாக இருக்கும். எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும் இடம் என்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களை அழைத்துச் சென்றால் ரீங்கரித்து விழக்கூடிய இந்த அருவில் உற்சாகமாக குளித்து மகிழ்வார்கள்.

கன்னிகாம்பாறை அருவி
தென்காசியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உரிய அனுமதி பெறாமல் அங்கு செல்ல முடியாது.கற்குடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, இதமான சூழலில் உள்ளது. அனுமதி பெற்றுச் சென்றால் மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இந்த அருவி அமையும்.


சென்னைக்கு மிக அருகில் இருக்கிற மிக முக்கியமான ட்ரெக்கிங் ஸ்பாட்!
நாகலாபுரம் - சென்னையிலிருந்து 90கிமீ


ஆந்திராவின் திருப்பதிக்கு அருகில் இருக்கின்ற மலைப்பகுதியில் இது அமைந்துள்ளது. இங்கே ட்ரெக்கிங் செய்கிற வழியில் இயற்கையின் அழகை ஆசை தீர ரசிக்கலாம். கூடவே அழகான அருவிகளிலும் குளிக்கலாம். ஒரே நாளில் போய் திரும்ப முடியும். ஆனால், மிகவும் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டும். பதிமூன்று கிலோமீட்டர் நீள்கிற இப்பயணத்தின் இறுதியில் இருக்கிற சுனையில் குளிப்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். நவம்பர் டூ ஜனவரி இங்கே செல்வது சிறந்த அனுபவமாக இருக்கும்

தடா அருவி - சென்னையிலிருந்து 90 கிமீ

உப்பலமடகு என்கிற தடா அருவி,  ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து பைக்கிலேயே இளைஞர்கள் போய்வருகிற இடம் இது. நாகலாபுரம் அளவுக்கு கடினமான ட்ரெக்கிங்காக இருக்காது. ஆனால் அதே அளவுக்கு இனிய அனுபவத்தை தரக்கூடியது. பேஸ்கேம்பிலிருந்து காய்ந்துபோன மலையில் தொடங்கும் பயணம் போகப்போக அடர்த்தியான காட்டுக்குள் நுழைந்து,  இறுதியில் ஒரு சூப்பரான அருவியில் முடியும்! இரண்டு கிலோமீட்டர்தான் நடக்கவேண்டியிருக்கும். போகும் வழியெல்லாம் சின்ன சின்ன சுனைகளில் ஜாலி ஆட்டம் போடலாம். போகும் வழியில் ஒரு சிவன் கோயிலும் உண்டு. ஜூனிலிருந்து நவம்பர்வரை சென்றால் சிறப்பான அனுபவமாக இருக்கும்.

செஞ்சி கோட்டை - சென்னையிலிருந்து 160 கிமீ

தமிழ்நாட்டில் மிச்ச சொச்சமுள்ள கோட்டைகளில் இதுவும் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில்
உள்ளது. சென்னையிலிருந்து மிக அருகில் இருப்பதால் வீக்எண்டில் ஒரே நாளில் போய்வரமுடியும். இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோட்டைக்கு வரலாற்று ட்ரெக்கிங் போவது கொஞ்சம் அறிவையும் வளர்த்துக்கொள்ள உதவும். இதில் ஏறுவதும் கடினமானதல்ல. அதனால் குழந்தைகளையும் கூட அழைத்து செல்லமுடியும் என்பதால், குடும்ப சுற்றுலாவுக்கும் ஏற்ற இடம் இது. வருடம் முழுக்க எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம். அதிக செலவும் வைக்காத இடம்.

ஏலகிரி பெருமாடு அருவி - சென்னையிலிருந்து 220கிமீ



சென்னைக்கு பக்கத்திலேயே இருக்கக்கூடிய அருமையான மலைவாசஸ்தலம். சாகச விரும்பிகளுக்கும் ஏற்ற இடம் இது. இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருப்பதால் கொஞ்சம் குளுமையும் இருக்கும். இங்குள்ள பல இடங்களும் ட்ரெக்கிங் போவதற்கேற்றவை என்பதால் எப்போது வேண்டுமானாலும் இங்கே ட்ரெக்கிங் போகலாம். 14ஹெர்பின் பெண்டுகளை கடந்து பயணித்து மலையேறுவதே நல்ல இனிமையான பயணமாக இருக்கும். இங்குள்ள ட்ரெக்கிங்ங்குகளில் சிறந்தது பெருமாடு அருவிக்கு செல்வதுதான். மூன்று கிலோ மீட்டர் நீள்கிற இந்த ட்ரெக்கிங் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். முடிவில் நாம் காண்கிற நாற்பதி உயரமுள்ள அருவியின் அழகு கண்கொள்ள காட்சியாக இருக்கும். கூடவே அருவியில் குளித்தும் மகிழலாம்.

தலக்கோணா அருவி - சென்னையிலிருந்து 190கிமீ

அடர்த்தியான ஆந்திர காட்டுப்பகுதியில் சித்தூருக்கு அருகில் இருக்கிறது இந்த அருவி. இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தால் எளிதில் அருவியை அடையலாம். சித்தேஸ்வரசாமி கோயில் ஒன்று வழியில் இருக்கிறது. பல்வேறு வித மூலிகைகளை கடந்து வருவதால், இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது. இது ்ரீவெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்ககில் இருக்கிறது. 270அடியிலிருந்து விழக்கூடிய இந்த அருவியை பார்ப்பதே மிகசிறப்பான பயணமாக மாற்றிவிடும்.


No comments:

Post a Comment